உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரோக்கியோ ஒலிம்பிக்-2020 ஒத்திவைக்கப்பட்டமையால் 800 மில்லியன் டொலர் மேலதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் ஜூலை - ஓகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்து. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கின்றது.
பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு, அந்த நகர நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமி்ட்டி ஏற்றுக்கொள்ளும். ஜப்பான் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 12.6 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது.
தற்போது ஒரு வருடத்திற்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 800 மில்லியன் டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணத்தை போட்டி அமைப்பாளர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தோமஸ் பேச் தெரிவித்துள்ளார்.
800 மில்லியன் டாலரில் 650 மில்லியன் டாலரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என்றும், 150 மில்லியன் டாலரை சர்வதேச பெடரேசன்கள், தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் ஆகியவற்றிடம் இருந்து வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தோமஸ் பேச் கூறுகையில் ‘‘போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும் வகையில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கை, அடுத்த வருடம் சிறப்பாக நடத்தி முடிக்க நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டதில் இருந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. எதிர்காலம் திட்டம் குறித்து எந்தவொரு ஊகங்களையும் நாம் தெரிவிக்க இயலாது’’என்றார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19)